Published : 21 Jun 2018 11:09 AM
Last Updated : 21 Jun 2018 11:09 AM

உணவுகள் ஆர்டர் செய்வது, கால்டாக்சி புக்கிங் உட்பட புதிய வசதிகளுடன் ஐஆர்சிடிசி இணையதளம் புதுப்பிப்பு

ரயில் டிக்கெட் உறுதியாகும் வாய்ப்புகள், ரயில்களில் உணவு கள் ஆர்டர் செய்வது, கால்டாக்சி புக்கிங் உட்பட பல்வேறு புதிய வசதிகளுடன் ஐஆர்சிடிசி இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவின்போது, இருக்கை அல்லது படுக்கை வசதி இருப்பு நிலை, காத்திருப்பு எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை வெளிப்படையாக காண முடிகிறது. இந்நிலையில், பயணிகளின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, ஐஆர்சிடிசி இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஐஆர்சிடிசி இணையதளத்தை தினமும் 13 லட்சம் முதல் 14 லட்சம் பேர் வரை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தற்போது பல்வேறு புதிய வசதி களுடன் ஐஆர்சிடிசி இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் டிக்கெட் இருப்பு நிலையை இந்த இணையதளத் தில் எளிதாக பார்க்க முடியும்.

டிக்கெட் முன்பதிவின்போது, குறிப்பிட்ட ஒரு ரயிலில் டிக்கெட் கிடைக்காவிட்டால், அதேநாளில் அதே தடத்தில் மற்ற நேரங்களில் செல்லும் ரயில்களில் டிக்கெட் இருப்பு நிலையையும் பார்க்க முடியும். இதன்மூலம் மற்ற ரயில்களில் பயணிகள் எளிதாக டிக்கெட் பெற முடியும். ரயில் நிலையங்களில் வைஃபை, பேட்டரி கார், ஓய்வு அறைகள் உள்ள பட்டியல், உணவுகளை ஆர்டர் செய்யும் வசதி, கால்டாக்சி புக்கிங் வசதி, செல்போன் செயலி மூலம் சேவை பெறும் வசதி, ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் மற்றும் அதன் விலைப் பட்டியல், விடுமுறை நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட விபரங்களை எளிமையாக மக்கள் பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, டிக்கெட் முன்பதிவின்போது, காத்திருப்பு பட்டியல் அல்லது ஆர்ஏசியாக இருந்தால் அந்த டிக்கெட் உறுதியாகும் வாய்ப்புகள் குறித்து பயணிகள் அறிந்து கொள்ளலாம். தற்போதுள்ள சர்வர் தரநிலைப்படி, ஒரு நிமிடத்துக்கு 15 ஆயிரம் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்ய முடியும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் பொறுத்து சர்வரின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

முதியவர்களுக்கான வசதி

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘ஐஆர்சிடிசி இணையதளம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ரயிலில் பயணம் செய்யும் முதியவர்களுக்கு கீழ் படுக்கை வசதி என்பது முக்கியமானதாக இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் அவர் களுக்கு கீழ்படுக்கை கிடைப்ப தில்லை. இதனால், அவர்கள் ரயில் பயணத்தின் போது கடுமை யாக அவதிப்படுகின்றனர். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது முதியோர், கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு தேவையான கீழ்படுக்கை இருப்பு விவரங்கள் வெளிப்படையாக இல்லை. இந்த விவரங்கள் வெளிப்படையாக இருந்தால், மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் கடந்த சில நாட்களாக சர்வர் பிரச்சினை இருக்கிறது. இதற்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும்போது மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி களுக்கு கீழ்படுக்கை வசதி ஒதுக்கீடு செய்துதர வேண்டும். மற்றவர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்திருந்தாலும், மூத்த குடிமக்களுக்கும் உதவும் வகையில் பணியில் இருக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x