

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது வரதராஜபுரம் ஊராட்சி. ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது இந்த ஊராட்சி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும். அடையாறு ஆற்றை ஒட்டி இந்த ஊராட்சி இருப்பதே இதற்கு காரணம்.
2022-ம் ஆண்டு நீர்நிலைகள் மற்றும் போக்கு கால்வாய்கள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசின் மெத்தனம் குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகளை வருவாய்த்துறை மற்றும் நீர்வளத் துறையினர் இணைந்து மேற்கொண்டனர். கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போது வரதராஜபுரம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
வரதராஜபுரம் ஏரி பகுதியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் (சர்வே எண் 157/182/189) வரதராஜபுரம் ஊர் பகுதி, பாரத் நகர் மற்றும் புருஷோத்தமன் நகர் வழியாக சென்று அடையாறு ஆற்றில் கலக்கிறது. இந்த உபரி நீர் கால்வாய் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறை மற்றும் நீர் வளத்துறையினர் சார்பாக 2022-ம் ஆண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை எந்தவித ஆக்கிரமிப்பு அகற்றும் பணியும் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சமூக விரோதிகள் சிலர், கால்வாய் பகுதியை மனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த இடத்தில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இது மட்டுமின்றி ஊரக வளர்ச்சி துறை சார்பில் சாலைகளும் அமைக்கப்பட்டிருப்பது வேதனையான விஷயம். இப்படியே போனால் இருக்கும் எஞ்சிய கால்வாயும் காணாமல் போய் விடும் என்பதில் மாற்றமில்லை.
உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தெரிந்தும் அதை தடுக்கவோ ஆக்கிரமிப்புகளை அகற்றவோ நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் இவ்விஷயத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
அதனால், மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு நேரடியாக ஆய்வு செய்து, உபரி நீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, உபரி நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கால்வாய் இடத்தை பொதுமக்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பின் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. வருவாய்த்துறையினர் சர்வே செய்ய கேட்டும் இதுவரை அவர்களும் தங்கள் பணியை செய்யவில்லை. அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.