Published : 03 Jun 2018 08:05 AM
Last Updated : 03 Jun 2018 08:05 AM

தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் பெற்றால்தான் வெற்றி: ஜி.கே.வாசன் கருத்து

குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் பெற்றுத் தந்தால் மட்டுமே, காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததை வெற்றியாகக் கருத முடியும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்து மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை எந்தக் கட்சியும் தங்களது வெற்றி எனக் கொண்டாட முடியாது. இதைத் தங்களது வெற்றியாகக் கொண்டாடும் அரசியல் கட்சிகளை விவசாயிகளும், மக்களும் ஏற்க மாட்டார்கள். அவ்வாறு கொண்டாடுவதும் நல்ல அரசியலுக்கு எடுத்துக்காட்டு அல்ல.

விவசாயிகள் கேட்கும் குறுவை சாகுபடிக்கான தண்ணீரை காவிரியில் பெற்றுத் தர வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு சேர குரல் கொடுத்து தண்ணீரைப் பெற்றால்தான் ஆணையம் அமைத்ததை வெற்றி எனக் கூற முடியும்.

தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தேவையற்றது. இதைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்து உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியதை, தமிழகத்தில் நூறு சதவீதமும் போராட்டம் கூடாது என அவர் கூறியதாக நான் கருதவில்லை. ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும், தலைவருக்கும் கருத்துகள் வெவ்வேறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றுதான்.

தமிழகத்தில் மக்களின் எண்ணங்களை ஆட்சியாளர்கள் பிரதிபலிக்கவில்லை. எனவே, ஆட்சியாளர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x