Published : 17 Jun 2018 10:30 AM
Last Updated : 17 Jun 2018 10:30 AM

தண்டவாள பராமரிப்பால் ரயில்கள் தாமதம்: 90 விரைவு ரயில்களின் நேரம் மாற்றம் - தெளிவில்லாத அறிவிப்பால் பயணிகள் குழப்பம்

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக சுமார் 90 விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் பெயர், எண் குறிப்பிடப்படாததால் ரயில்வேயின் அறிவிப்பு, பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தெற்கு ரயில்வேயில் பல்வேறு இடங்களில் ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால், சில ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் தாமதமாக வருகின்றன. இதனால், மேற்கண்ட கோட்டங்களில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்களில் 92 ரயில்களின் நேரம் கடந்த 13-ம் தேதி முதல் தற்காலிமாக மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான விரைவு ரயில்கள் வந்தடையும் நேரம் 30 நிமிடங்களும், ஓரிரு விரைவு ரயில்கள் 45 முதல் 60 நிமிடங்கள் வரையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் குழப்பம்

90-க்கும் மேற்பட்ட ரயில்களின் நேரம் மாற்றப்பட்டும், இதுதொடர்பான முறையான அறிவிப்பு எதையும் தெற்கு ரயில்வே வெளியிடவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பிலும், ரயில் பெயர், அதன் எண்கூட தெரிவிக்கப்படவில்லை. இது, பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x