Published : 13 Jun 2018 10:27 AM
Last Updated : 13 Jun 2018 10:27 AM

பூச்சிகள் மிதந்த நீரை பருகியதால் பாதிப்பு; கேன் குடிநீர் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

பூச்சிகள் மிதந்த குடிநீரைப் பருகியதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என பிரபல கேன் குடிநீர் நிறுவனத்துக்கு நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வடபழனியைச் சேர்ந்த நடிகர் ஜோக்கர் துளசி சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:

கடந்த 2009 அக்டோபர் 10-ம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள முகவர் மூலம் எனக்கு கேன் குடிநீரை விநியோகித்தனர். அந்த கேன் குடிநீரைப் பருகிய சில நிமிடங்களில் எனக்கு தலைசுற்றல் ஏற்பட்டது.

அந்த கேனை பார்த்தபோது அதில் பூச்சிகள் மிதந்தது தெரியவந்தது. உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பகுதி மேலாளரிடம் புகார் தெரிவித்தேன். எனது வீட்டுக்கு வந்து ஆய்வு செய்த சந்தானராஜ் என்பவர், பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேன் குடிநீர் நிறுவனத்தின் சேவை குறைபாடு, எனக்கு ஏற்பட்ட மன உளைச் சலுக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர்கள் கே.அமலா, டி.பால்ராஜசேகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

தண்ணீரின் தரத்தில் குறை பாடு இருந்தால் அதை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சேவை குறைபாடு என மனுதாரர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என குடிநீர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் சேவை குறைபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கேன் குடிநீருக்காக மனுதாரர் செலுத்திய ரூ.60, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.5 ஆயிரத்தை கேன் குடிநீர் நிறுவனம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x