“போர்க்கால அடிப்படையில் மழை வெள்ள மீட்புப் பணிகள்” - அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை ஸ்டீபன்சன் சாலையில் மழையால் முறிந்து விழுந்த மரத்தை வெட்ட அகற்றும் மாநகராட்சி பணியாளர்கள்
சென்னை ஸ்டீபன்சன் சாலையில் மழையால் முறிந்து விழுந்த மரத்தை வெட்ட அகற்றும் மாநகராட்சி பணியாளர்கள்
Updated on
1 min read

சென்னை: “மக்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை. இந்தப் பேரிடரில் இருந்து மக்களை காப்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை வெள்ள பாதிப்புகளை, பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, நேற்று தமிழக முதல்வர் ஆய்வு செய்த புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் முழுவதுமாக தண்ணீர் வடிந்திருக்கிறது.

பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்குவது வழக்கம். காரணம் இது பள்ளமான, தாழ்வான பகுதி, இங்கு தேங்கக்கூடிய தண்ணீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று முதல்வர் நேற்று இந்தப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை துரிதமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின் தடை, பால் தேவை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் போர்க்கால அடிப்படையில், தமிழக அரசும், திமுகவும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை. இந்தப் பேரிடரில் இருந்து மக்களை காப்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எனவே, குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எங்களது தரப்பில் குறைகள் இருந்தால், நிச்சயமாக அதற்கு செவிசாய்த்து, அந்த குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in