கருணாநிதி குறித்து அவதூறு: சீமான் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

சீமான் | கோப்புப் படம்.
சீமான் | கோப்புப் படம்.
Updated on
1 min read

கரூர்: கருணாநிதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பான புகாரில் சீமான் மீது தாந்தோணிமலை போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த கரூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டப் பேரவை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் ஒன்றைப் பாடினார். இது தொடர்பாக அவர் மீது திருச்சி மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகஸ்ட் 4-ம் தேதி சாட்டை துரைமுருகன் பாடல் குறித்து பேசி, ''அதே பாடலை நானும் பாடுகிறேன். காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது எனப் பார்க்கிறேன்'' எனக்கூறி அதே பாடலைப் பாடினார். அப்போது அவர் அவதூறான வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.

இதையடுத்து, சீமான் மீது மேற்படி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆகஸ்ட் 5-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். ஆகஸ்ட் 14-ம் தேதி தாந்தோணிமலை காவல் நிலையம் மற்றும் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கும் அவர் புகார் அனுப்பினார். இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் தமிழ் ராஜேந்திரன் ஆகஸ்ட் மாதமே வழக்குத் தொடர்ந்தார். அக்டோபர் 7ம் தேதி இவ்வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 தாந்தோணிமலை காவல் நிலையத்தில் இவ்வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க இன்று உத்தரவிட்டது. இதுகுறித்து வழக்கறிஞர் ராஜேந்திரன் கூறுகையில்,''இவ்வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அபராதத்துடன் 2 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in