Published : 13 Jun 2018 07:49 AM
Last Updated : 13 Jun 2018 07:49 AM

கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறாததால் டெல்டாவில் ரூ.2,361 கோடி உற்பத்தி இழப்பு: இதே நிலை தொடர்வதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறாததால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மட்டும் ரூ.2 ஆயிரத்து 361 கோடியே 60 லட்சம் மதிப்பில் நெல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடராமல் இருக்க மேலாண்மை ஆணைய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

ஜூன் 12-ம் தேதியான நேற்றுடன் 7-வது ஆண்டாக, மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்குத் திறக்கப்படவில்லை. இந்த அறிவிப்பை ஆற்றுப் பாசன விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்துடனேயே எதிர்கொண்டு வருகின்றனர். ஏனெனில், காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி நடைபெறாததால் ஏற்பட்டுள்ள நெல் உற்பத்தி இழப்பும், அதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவும்தான் இதற்கு காரணம்.

உதாரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள சாகுபடி பரப்பளவு சுமார் 1.10 ஆயிரம் ஹெக்டேர். இதில், குறுவை சாகுபடி மேற்கொள்ள சாத்தியமுள்ள நிலப்பரப்பு 40 ஆயிரம் ஹெக்டேர். இவற்றில் ஆழ்குழாய் கிணற்றைப் பயன்படுத்தி சுமார் 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மீதமுள்ள சுமார் 17 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவானது ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ளதால் அவற்றில் சாகுபடி செய்ய முடியவில்லை.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் ஹெக்டேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் என இம் மூன்று மாவட்டங்களில் 41 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு குறுவை சாகுபடி நடைபெறாததால் விவசாயிகள் விளைநிலங்களை தரிசு நிலமாகவே வைத்துள்ளனர்.

உற்பத்தி இழப்பு

வேளாண் துறை கணக்கீட்டின்படி சராசரி மகசூல் ஒரு ஹெக்டேருக்கு 6 மெட்ரிக் டன் எனில், 41 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படாததால் ஆண்டொன்றுக்கு 2 லட்சத்து 46 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 6 ஆண்டுகளைக் கணக்கிட்டால் 14 லட்சத்து 76 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள விலைப்படி 1 மெ.டன் ரூ.16,000 எனில் (சாதாரண ரகம்) இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரத்து 361 கோடியே 60 லட்சம் ஆகும்.

இதுகுறித்து, விவசாயிகள் சட்டப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் நாகை கிரிதரன் கூறியபோது, “ஆண்டுக்கு இரண்டு வருமானம் பார்த்த விவசாயிகள், கடந்த 6 ஆண்டுகளில் வயலை தரிசாகப் போட்டு வைத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்நிலை ஏற்படாமல் தடுக்க ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்து ஜனவரி 28-ம் தேதி மூட வேண்டும் என்ற தமிழகத்துக்கான விதிமுறைகளை கர்நாடகத்துக்கும் விதித்து, அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறும் கர்நாடகத்தின் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x