அக்.31-க்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5% தள்ளுபடி: மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி
Updated on
1 min read

மதுரை: அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாக மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் வருவாய் கிடைக்கிறது. இதில், சொத்து வரியே மாநகராட்சிக்கு கிடைக்கும் பிரதான வருவாய் இனமாக உள்ளது.

இந்த வருவாயை கொண்டு மாநகராட்சி, பல்வேறு அடிப்படை வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சொத்து வரி நிலுவை இல்லாமல் செலுத்தவோர் குறைவாகவே உள்ளது. அதனால், சொத்து வரியை விரைவாக செலுத்த மாநகராட்சி, வார்டுகள் தோறும் பில்கலெக்டர்களை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி 2024-2025-ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை எதிர்வரும் 31.10.2024 தேதிக்குள் செலுத்தும் சொத்து வரி உரிமையாளர்களுக்கு சொத்து வரி தொகையில் 5 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5000) தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஏனவே, மதுரை மாநகராட்சி 100 வார்டுப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை 2024 அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடியினை பெற்றிடுமாறும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறும் ஆணையாளர் தினேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in