மெரினா வளைவு சாலையில் உள்ள மீன் கடைகளை நவீன மீன் சந்தைக்கு மாற்ற நடவடிக்கை

மெரினா வளைவு சாலையில் உள்ள மீன் கடைகளை நவீன மீன் சந்தைக்கு மாற்ற நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: சென்னை மெரினா வளைவு சாலை பகுதியில் அதிக அளவில் மீன் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், துர்நாற்றம் வீசுவதாகவும், சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடைகளை முறைப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து இப்பகுதி மீன் விற்பனையாளர்களுக்கென மாநகராட்சி சார்பில் நொச்சிக்குப்பம் பகுதியில் ரூ.15 கோடியில் 366 கடைகள் கொண்ட மீன் சந்தை கட்டப்பட்டது. இந்த நவீன மீன் சந்தையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம், 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் சந்தையை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக கடைக்காரர்களுக்கு மாநகராட்சி சார்பில் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: சாலையோரம் இயங்கி வரும் மீன் கடைகள் தொடர்ந்து, புதிய சந்தை பகுதிக்கு மாற்றப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து கடைகளும் சந்தைக்கு மாற்றப்படும். மெரினா வளைவு சாலை சாலையோர வியாபாரம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in