Published : 03 Jun 2018 10:05 AM
Last Updated : 03 Jun 2018 10:05 AM

சாலையோரம் நிறுத்தியதால் விபரீதம்: கன்டெய்னரில் பைக் மோதி 2 மீனவர்கள் உயிரிழப்பு; நீலாங்கரை விபத்தில் இளைஞர் பலி

எண்ணூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னரில் பைக் மோதி 2 மீனவர்கள் உயிரிழந்தனர். நீலாங்கரையில் நின்றிருந்த கார் மீது பைக் மோதியதில் இளைஞர் பலியானார்.

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மோகன் (28). காசிமேடு புதுமனை குப்பத்தைச் சேர்ந்தவர் லியோ (24). இருவரும் மீனவர்கள். இவர்கள் 2 பேரும் கடந்த 1-ம் தேதி நள்ளிரவு 12.45 மணி அளவில் எண்ணூரில் இருந்து திருவொற்றியூர் நோக்கி பைக்கில் சென்றனர். பைக்கை லியோ ஓட்டியதாக கூறப்படுகிறது.

எண்ணூர் விரைவு சாலை, பாரதியார் நகர் அருகே செல்லும்போது, சாலையில் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது பைக் பலத்த வேகத்தில் மோதியுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் கிடைத்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர். 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கவனக்குறைவாக கன்டெய்னர் லாரியை சாலையில் நிறுத்திவைத்து, விபத்துக்கு காரணமாக இருந்ததாக அதன் ஓட்டுநர் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (22). இவர் மனைவி சுகன்யாவுடன் 1-ம் தேதி இரவு 8.30 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலையில் பைக்கில் சென்றுள்ளார். நீலாங்கரை காவல் நிலையம் அருகே சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த கார் மீது பைக் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி, அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x