எந்தெந்த பகுதிகளில் 2,002 ஏக்கர் வாரிய நிலம் விடுவிப்பு? - தமிழக வீட்டு வசதித் துறை தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மதுரை, சேலம் மண்டலங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்தின் 2,002 ஏக்கர் நிலம் எந்தெந்த பகுதிகளில் விடுவிக்கப்படுகிறது என்பதை அரசாணையில் வீட்டுவசதித் துறை தெரிவித்துள்ளது.

தமிழக வீட்டுவசதி வாரியத்தால் ஆர்ஜிதம் செய்ய நோட்டீஸ் தரப்பட்ட நிலங்கள், உரிமையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டும் எடுக்கப்படாத நிலங்கள் என தமிழகம் முழுவதும் கண்டறியப்பட்ட 18 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அதில் வசிப்பவர்களுக்கே வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான குழு அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் வாரியத்தால் நோட்டீஸ் வழங்கப்பட்டு எடுக்கப்படாத 5 ஆயிரம் ஏக்கரில் முதல்கட்டமாக 2002.21 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில், பயன்பெற்றவர்களில் 10 பேர் கடந்த அக்.4-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிலையில், மாவட்டம் தோறும் விடுவிக்கப்பட வேண்டிய நிலம் தொடர்பாக வீட்டுவசதி வாரியத்தால் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

மதுரை மண்டலத்தில், மதுரை மாவட்டத்தில் விளாங்குடி, தத்தனேரி, பொன்மேனி, தோப்பூர், உச்சபட்டி, ஆனையூர், சிலையநேரி, மாடக்குளம், மேற்கு மதுரை பகுதிகளிலும், அரியலூர் - குரம்பன் சாவடி, தஞ்சாவூர் - நீலகிரி தெற்கு தோட்டம், மகாராஜ சமுத்திரம், விழுப்புரம் - சாலமேடு, கடலூர் - வில்வராயநத்தம், வெளி செம்மண்டலம், திண்டுக்கல் - செட்டிநாயக்கன்பட்டி, விருதுநகர் - சதிரராயடியபட்டி, திருச்சிராப்பள்ளி - வாழவந்தான்கோட்டை, நாவல்பட்டு, கரூர் - தாந்தோனி, திருநெல்வேலி - குலவாணிகபுரம், கன்னியாகுமரி - வடிவீஸ்வரம், தூத்துக்குடி - மீளவிட்டான், ராமநாதபுரம் - சூரன்கோட்டை, சக்கரகோட்டை ஆகிய பகுதிகளில் 317.75 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுகிறது.

அதே பேல், சேலம் மண்டலத்தில், தருமபுரி - ஏ.ஜெட்டிஹள்ளி, கிருஷ்ணகிரி - கட்டிகனபள்ளி, சென்னாத்தூர், ஒசூர், ஈரோடு - கொல்லம்பாளையம் கிராமம், பெரியசெம்மூர், முத்தம்பாளையம், வேலூர் - சத்துவாச்சேரி, அலமேலுமங்காபுரம், திருப்பத்தூர் - ஆம்பூர் டவுன், ராணிப்பேட்டை - சீக்கராஜ்புரம், வாலாஜா டவுன், வாலாஜா டவுன் மற்றும் ஆனந்தாலை, திருவண்ணாமலை - திருவண்ணாமலை, காஞ்சிபுரம் - சிவகாஞ்சி, கொன்னேரிக்குப்பம், செவிலிமேடு, சேலம் - நரசிங்கபுரம், அய்யம்பெருமாள்பட்டி, கண்டம்பட்டி மேற்கு மற்றும் கிழக்கு, கொட்டகவுண்டம்பட்டி, அழகாபுரம்புதூர், நாமக்கல் - கடச்சநல்லூர், முத்தம்பாளையம, கொண்டிசெட்டிப்டி, வகுராம்பட்டி, புதுப்பாளையம், பள்ளிப்பாளையம், கோயம்புத்தூர் - கணபதி, விளாங்குறிச்சி, வீரகேரளம், தெலுகுபாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, குமாரபாளையம், காலப்பட்டி, உப்பிலிபாளையம் பகுதிகளில் 1141.68 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுகிறது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் குத்தம்பாக்கம், கீழ்முதலம்பேடு (பணப்பாக்கம்), பெருமாளகரம், வெள்ளவேடு, செம்பரம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 542.79 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in