கோவை ஈஷா மையத்தில்  இரண்டாவது நாளாக, காவல்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
கோவை ஈஷா மையத்தில் இரண்டாவது நாளாக, காவல்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

ஈஷா மையத்தில் 2-வது நாளாக காவல்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை

Published on

கோவை: கோவை ஈஷா மையத்தில் இன்று (அக்.2) இரண்டாவது நாளாக, காவல்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் பேராசிரியர் காமராஜ். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘எனது மகள்கள் லதா, கீதா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையத்தில், யோகா கற்கச் சென்றனர். அதன் பின்னர், அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். அங்கு அவர்களை தனி அறையில் அடைத்து துன்புறுத்தல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் நானும், எனது மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்புக் கேட்டால் தான், எனது மகள்களுடன் பேச முடியும் என அவர்களது தரப்பில் கூறப்படுகிறது. எனது மகள்களை மீட்டுத் தர வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என ஆய்வு செய்து, வரும் 4-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவை மாவட்ட காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.1) ஈஷா யோகா மைய வளாகத்தில் விசாரணை நடத்தினர். நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடந்தது.

அதைத் தொடர்ந்து இன்றும் (அக்.2) இரண்டாவது நாளாக விசாரணை நடந்தது. கோவை மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சமூகநலத்துறை அதிகாரிகள், காவல்துறை, குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் என மொத்தம் 6 குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் குழுவினர் ஈஷா வளாகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஈஷா யோகா மையத்தில் இதுவரை தங்கியிருந்தவர்கள் எத்தனை பேர்?, பெண்கள் எவ்வளவு பேர் துறவறம் பூண்டுள்ளனர்?. வெளிநாட்டினர் எத்தனை பேர் உரிய ஆவணத்துடன் தங்கியுள்ளனர்?. இம்மையத்துக்கு வந்து மாயமானவர்கள் யாராவது உள்ளனரா? என்பது போன்ற தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in