Published : 28 Jun 2018 08:36 AM
Last Updated : 28 Jun 2018 08:36 AM
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக விளங்குவது சென்னை என்று மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்யநாதன் பெருமிதம் தெரிவித்தார்.
சமூக நலத் துறை சார்பில் பெண்களுக்கான 2 நாள் சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு, நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கருத்தரங்குக்கு தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தனியார் நிறுவன ஆய்வு தவறு
உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என்று தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தவறு. இதுகுறித்து, மகளிர் ஆணையம் கணக்கெடுப்பு நடத்தும்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான மாவட்டமாக நீலகிரி உள்ளது. இங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகக் குறைவு. மலைவாழ் பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இப்போதுதான் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி கிடைத்துள்ளது.
நிர்பயா நிதி ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும். சென்னையில் ஏதோ ஓரிரு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறலாம். ஆனால், நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான இடம் சென்னை தான். இவ்வாறு மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்யநாதன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT