Published : 09 Jun 2018 09:37 AM
Last Updated : 09 Jun 2018 09:37 AM

எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஜுன் 11, 12-ல் கடைசி வாய்ப்பு: சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

எஸ்எஸ்எல்சி சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

``எஸ்எஸ்எல்சி துணை பொதுத்தேர்வு ஜுன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கடந்த மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வராகவோ எழுதியிருக்க வேண்டும். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் விண்ணப்பித்துவிட்டுத் தேர்வு எழுதாத அனைத்துப் பாடங்களையும் உடனடி தேர்வில் எழுத விண்ணப்பிக்கலாம்.

இந்த சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஜுன் 11, 12 (திங்கள், செவ்வாய்) ஆகிய நாட்களில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். மார்ச் மாத தேர்வு எழுதியவர்கள் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலையும், தேர்வு எழுதாதவர்கள் தங்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை விண்ணப்பம் பதிவுசெய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண் டும்.

தேர்வுக்கட்டணம் ரூ.125. சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500 ஆக மொத்தம் ரூ.625. தேர்வுக்கட்டணத்தை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பண மாக செலுத்த வேண்டும்.

சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வு மையம் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே அமைக்கப்படும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பதி விறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு

இதேபோல், ஜுன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களும் சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதி காரி அலுவலகத்தில் ஜுன் 11, 12 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.50 மற்றும் இதர கட்டணம் ரூ.35. அதோடு சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000, பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x