Published : 16 Jun 2018 08:57 AM
Last Updated : 16 Jun 2018 08:57 AM

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களை அதிமுகவில் சேர்ப்பதை தலைமை முடிவு செய்யும்: அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை ராயபுரத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியில், 2 சத்துணவுக் கூடங்கள், ஒரு ரேஷன் கடைக்கான கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடங்களை, தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் செய்தி யாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததாவது:

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று வந்துள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது. கருத்துகள் கூறலாம். இதில் தலைமை நீதிபதியின் தீர்ப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். தீர்ப்பில் பேரவைத் தலைவருக்கு உள்நோக்கம் இல்லை. அவருக்கு அதிகாரம் உள்ளது. பேரவைத் தலைவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கூடாது என்பதுதான் தீர்ப்பின் முக்கிய சாராம்சம். மாறுபட்ட கருத்தை இன்னொரு நீதிபதி கூறியுள்ள நிலையில், 3-வது நீதிபதிக்கு செல்கிறது. எது எப்படி இருந்தாலும், வரலாற்றில் துரோகங்கள் வென்றதாக சரித்திரமில்லை. வீழந்ததாக தான் சரித்திரம் உண்டு. துரோகம் வீழும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த தீர்ப்பு மக்களுக்கான தோல்வி என்று தினகரன் விமர்சித்துள்ளாரே?

இந்த அரசு யாருடைய அரசு என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதா அமைத்த அரசு. இந்த அரசு 5 ஆண்டு தொடர வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டரின் எண்ணம். ஆனால், இந்த எண்ணத்துக்கு மாறாக செயல்படு பவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது. இந்த அரசு தொடரக் கூடாது என்று நினைப்பவர்கள், சதி செய்பவர்களை நிச்சயமாக வரலாறு மன்னிக்காது. மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றுதான் இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது.

நீதிமன்றம் 3 மாதங்களுக்கு, இந்த அரசை நீடிக்க செய்துள்ளது என்று தினகரன் கூறியுள்ளாரே?

நீதிமன்ற தீர்ப்பு குறித்து விமர்சிக்க கூடாது. மாறுபட்ட கருத்தை ஒரு நீதிபதி கூறினால், 3-வது நீதிபதிக்குச் செல்லும் என்பது வழக்கம். ஒரு மாதமோ 3 மாதமோ அதை நீதிமன்றம்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த 18 எம்எல்ஏக்களும் மீண்டும் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

துரோகம் செய்தவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்று கூறவில்லை. மாற்றான் தோட்டமாக இருந்தாலும் மதிக்கும் பண்பை பெற்றவர்கள் நாங்கள். அந்த 18 பேரும் அதிமுகவில் இணைத் துக் கொள்ள வேண்டும் என்றால், அது தொடர்பாக கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். அதற்காக நாம் யாரையும் புறந்தள்ளிவிட முடியாது. தினகரன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களை ஒரு போதும் இணைத்துக் கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x