மழையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 697 கன அடி நீர் வரத்து

புழல் ஏரி
புழல் ஏரி
Updated on
1 min read

திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் மழை நீர் வரத்து விநாடிக்கு 697 கன அடியாக உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் அடங்கிய திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 697 கன அடி என மழை நீர் வந்து கொண்டிருந்தது. அதேபோல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 350 கன அடியும், பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 50 கன அடியும், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 50 கன அடியும், சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 11 கன அடியும் மழை நீர் வந்துகொண்டிருந்தது.

அத்துடன், பூண்டி ஏரிக்கு, விநாடிக்கு 230 கன அடி வீதம் கிருஷ்ணா நீரும் வந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 2,197 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,116 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

அதேபோல், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 104 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியின் நீர் இருப்பு 299 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 62 மில்லியன் கன அடியாகவும் உள்ளதாக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in