“திருப்பதி லட்டு விவகாரத்தில் தமிழக அரசின் கருத்து என்ன?” - அர்ஜு ன் சம்பத்
திண்டுக்கல்: திருப்பதி லட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "பூரண மதுவிலக்கு என்பது எல்லா கட்சிகளின் கொள்கையாக உள்ளது. எல்லா கட்சிகளும் போராட்டங்கள் நடத்தியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என கூறி போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தக் கூடிய அரசியல் நாடகம். இந்து மக்கள் கட்சி மதுரை மற்றும் திண்டுக்கல்லில் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்புக்கான மாநாடு நடத்த உள்ளது.
பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக மோகன் ஜி எந்த நடைமுறைகளை பின்பற்றாமல் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மத மாற்றம் மிக அதிகமாக நடைபெறுகிறது. லட்டு விவகாரத்தில் தமிழக முதல்வரோ, இந்து சமய அறநிலையத் துறையோ எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை. தமிழகத்தில் சில கோயில்களில் திருநீரில் கலப்படம் உள்ளது. நல்ல குங்குமம் கிடைப்பதில்லை. தீப எண்ணெயில் கலப்படம் உள்ளது. எனவே, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.
