பாலியல் புகாரில் உண்மை இல்லை என தேனி நர்சிங் மாணவி ஒப்புக்கொண்டார்: திண்டுக்கல் எஸ்.பி. தகவல்

திண்டுக்கல் எஸ்.பி. அ.பிரதீப்
திண்டுக்கல் எஸ்.பி. அ.பிரதீப்
Updated on
1 min read

திண்டுக்கல்: தேனி நர்சிங் மாணவி ஒருவர், தன்னை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து திண்டுக்கல், தேனி மாவட்ட போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், திண்டுக்கல் எஸ்.பி. அ.பிரதீப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்காக பேருந்து மூலம் தேனி பழைய பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை காரில் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பின்னர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டதாகவும் கூறி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த மாணவி கூறியது போல கடத்தல் சம்பவமோ, பாலியல் பலாத்கார நிகழ்வோ நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், மன அழுத்தம் காரணமாக மாணவி அவ்வாறு புகார் தெரிவித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதை அந்த மாணவியே ஒப்புக் கொண்டுவிட்டார். குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் மாணவி தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். அவருக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்.பி. தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in