மீனவர்களுக்கு இலங்கை அரசு அதிக அபராதம்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

மீனவர்களுக்கு இலங்கை அரசு அதிக அபராதம்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
Updated on
1 min read

சென்னை: கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அதிக அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும். மீனவர்களுக்கு சட்ட உதவி வழங்கி, அவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த 37 மீனவர்கள், 3 படகுகளில் மீன்பிடிக்க சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை ஏற்கெனவே சுட்டிக்காட்டி உள்ளேன். தவிர, கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதத்தை இலங்கை நீதிமன்றங்கள் விதிக்கின்றன.

இவ்வாறு மீனவர்கள், படகுகள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதை தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவதுடன், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விரைவில் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in