Published : 20 Jun 2018 09:57 AM
Last Updated : 20 Jun 2018 09:57 AM

18 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக இருக்கிறோம்; தினகரன் அணியில் இருந்து யாரையும் இழுக்க முடியாது- முதல்வர் பழனிசாமிக்கு தங்க தமிழ்செல்வன் சவால்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் டிடிவி தினகரனின் தலைமையில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் தங்க தமிழ்செல்வன் கூறியதாவது: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வந்துள்ளது. இதனால் தமிழகமே கொந்தளிப்பில் இருக்கிறது. நாங்கள் 18 பேரும் எந்த தப்பும் செய்யவில்லை. இருப்பினும் எங்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். அதை எதிர்த்து 17 எம்எல்ஏக்கள் வழக்கை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளனர். நான் மட்டும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனுடன் ஆலோசனை நடத்திவிட்டு, வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்தேன்.

நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே வழக்கை வாபஸ் பெறுகிறேன். வேறு உள்நோக்கம் இல்லை. ஆனால், ‘டிடிவி தினகரனுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு; தினகரனுக்கு எதிராக நான் செயல்படுகிறேன்’ என்று வதந்தி பரப்புகின்றனர். நான் உட்பட 18 பேரும் அமமுக கட்சியில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். எங்களை எந்த சக்தியும் பிரிக்க முடியாது. எங்கள் அணியில் இருந்து யாராவது ஒருவரை அவர்கள் தங்கள் பக்கம் இழுக்கட்டும். நான் முதல்வர் பழனிசாமி பின்னால் போய்விடுகிறேன். அவர்கள் அணியில் இருந்து ஒருவர் எங்கள் பக்கம் வந்துவிட்டால், அங்குள்ள அனைவரும் தினகரனின் தலைமையை ஏற்று இங்கு வந்துவிட வேண்டும். முதல்வர் பழனிசாமிக்கும், அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இதை சவாலாக விடுகிறேன்.

முதல்வர் பழனிசாமியை நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் 18 பேரும் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. என் தொகுதிக்கு இப்போது எம்எல்ஏ இல்லை. நான் இந்த வழக்கை வாபஸ் பெற்றால், தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா என்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். விரைவில் நல்ல முடிவு எடுப்பேன் என்றார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x