

பழநி: பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகிகள் மீது கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பது ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்தது. நெய் கொள்முதல் செய்த நிறுவனங்களில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம், பழநி கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் விநியோகம் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தகவலை தமிழக அரசுமுற்றிலும் மறுத்ததுடன், பழநி பஞ்சாமிர்த தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, பஞ்சாமிர்தம் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியது.
இந்நிலையில், பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாக கூறி, பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், வர்த்தகப் பிரிவு நிர்வாகி செல்வகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேவஸ்தானம் சார்பில் பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.