Published : 12 Jun 2018 08:07 AM
Last Updated : 12 Jun 2018 08:07 AM
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மொழிப் பாடங்களில் தற்போது இருக்கும் 2 தாள்களை இணைத்து ஒரே தேர்வு தாளாக நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் (பிளஸ் 1, பிளஸ் 2) தமிழ் உள்ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் தாள்-1, தாள்-2 என இரண்டு தாள்கள் உள்ளன. அதனால், மொழிப் பாடங்களுக்கு மட்டும் மாணவர்கள் 4 தேர்வுகளை எழுதி வந்தனர். இந்நிலையில், மாணவர்களின் தேர்வுச் சுமை குறைக்கும் வகையில்,பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மொழிப்பாடங்களில் ஒரே தாளாக இணைத்து தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள 8 தேர்வுகளுக்கு பதில் 6 தேர்வுகளாக குறையும்போது மாணவர்களின் மன அழுத்தம் பெரிதும் குறையும். ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும்போது தற்போதுள்ள பாடப் பகுதிகளில் எந்தப் பகுதியும் நீக்கப்படாமல் அனைத்தையும் உள்ளடக்கியதாக ஒரு தாள் இருக்கும் வண்ணம் வினாத்தாள் தயாரிக்கலாம்.
மேல்நிலைக் கல்வியில் மொழிப் பா டம், ஆங்கிலம் இரண்டு தாள்களை ஒரே தாளாக ஒருங்கிணைக்க பாடத்திட்டக் குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை ஆசிரியர், பெற்றோர் குழுக்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. தேர்வு எண்ணிக்கை ஆறாக குறையும்போது மாணவர்களின் மன அழுத்தம் குறையும் என்ற நோக்கில் புதிய நடைமுறைக்கு பள்ளிக்கல்வி வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வன இயக்குநர் ஆகியோரின் கருத்து கள் அடிப்படையிலும் தற்போது நடைமுறையில் இருக்கும் 2 தாள்களை ஒரே தாளாக தேர்வெழுத ஆணையிடப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT