Published : 26 Jun 2018 09:32 PM
Last Updated : 26 Jun 2018 09:32 PM
அயனாவரத்தில் சாலையில் அறுந்துக்கிடந்த மின்சார ஒயர் குறித்து புகார் அளித்தும் மின்வாரிய ஊழியர்கள் அகற்ற வராததால் தவறுதலாக மின் ஒயரை மிதித்த கால்டாக்சி ஓட்டுநர் உயிரிழந்தார்.
மின்வாரியம் என்னதான் வளர்ச்சி அடைந்தாலும் புதைவட கம்பிகள் இல்லாமல் மின் கம்பங்கள் மூலமாக செல்லும் பழைமையான மின்சார ஒயர்கள் செல்லும் நிலை தலைநகர் சென்னையிலும் இன்றும் உள்ளது. சென்னை அயனாவரத்தில் இன்றும் அதுபோன்று உள்ள பகுதி உள்ளது.
அப்படி ஒரு பகுதிதான் முத்தம்மன் நகர். இப்பகுதியில் மேலே செல்லும் மின் ஒயர் ஒன்று நேற்றிரவு திடீரென அறுந்து விழுந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் மின் ஒயரை ஓரமாக போட்டுவிட்டு மின்சார வாரியத்துக்கு தகவல் அளித்தனர். ஆனால் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சரவணன்(43) கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த சரவணன் சிகரெட் பிடித்துக்கொண்டே மின் ஒயர் அறுந்துக் கிடந்த இடத்துக்கு வந்தவர் தெரியாமல் ஒயரை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சரவணன் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மின்வாரிய ஊழியர்கள் சரியான நேரத்திற்குள் வந்து மின் இணைப்பை துண்டித்திருந்தால் அநியாயமாக ஒரு உயிர் போயிருக்காது என்று அவரது உறவினர்கள் கோபத்துடன் தெரிவித்தனர். உயிரிழந்த சரவணன் மனைவி
உயிரிழந்த சரவணனுக்கு தேவிகலா(34) என்ற மனைவியும், 8 வகுப்பு பயிலும் ஒரு மகனும் உள்ளனர். இரண்டு கிட்னியும் செயலிழந்த தேவிகலா தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவரது மருத்துவ சிலவுக்கே திண்டாடி வந்த நிலையில் குடும்பத்துக்கு ஆதாரமாக இருந்த சரவணன் உயிரிழந்தது பெரிய இழப்பாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT