Published : 21 Jun 2018 09:11 AM
Last Updated : 21 Jun 2018 09:11 AM

தமிழகத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க சர்வ அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும்: முதல்வருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மதுரை செல்வதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நக்சலைட்கள், மத அடிப்படைவாதிகள் என பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். அவர்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலிருந்தே நான் கூறி வருகிறேன்.

தமிழகத்தின் அமைதியை குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். காவல்துறையிடம் சிக்கிய பயங்கரவாதிகள், மலைப்பகுதிகளில் நக்சலைட்களின் பயிற்சி முகாம்கள் நடப்பதாக கூறியுள்ளது பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. இது தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, பயங்கரவாதிகளை ஒடுக்க மாநில அரசுக்குள்ள சர்வ அதிகாரத்தையும் முதல்வர் பழனிசாமி பயன்படுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் அதுபற்றி மக்களிடம் பீதியை கிளப்பி அதனை முடக்க சில சக்திகள் திட்டமிட்டு வருகின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x