Published : 21 Jun 2018 08:49 AM
Last Updated : 21 Jun 2018 08:49 AM

ராகுலுடன் கமல்ஹாசன் ஆலோசனை: கட்சி பதிவு தொடர்பாக தேர்தல் அதிகாரிகளையும் சந்தித்தார்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து, அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். கட்சிப் பதிவு தொடர்பாக தேர்தல் அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேசினார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சிக்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரம் காட்டி வரும் அவர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். முன்ன தாக கட்சியை முறைப்படி பதிவு செய்ய டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் அழைப்பின் பேரில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கமல்ஹாசன் நேற்று சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் சென்றனர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

தேர்தல் ஆணைய அதிகாரி கள் சந்திக்க வருமாறு அழைத்திருந்தனர். அதற்காக வந்தோம். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தோம். கூடிய விரைவில் கட்சிக்கு பதிவு கிடைக்கும் என்று தெரிவித்தனர். கட்சியின் சின்னம் பற்றி எதுவும் பேசவில்லை. நடிகை கவுதமிக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது. பசுமைவழிச் சாலை திட்டத்தில் சுற்றுச்சூழல் பற்றி பேசினாலே குற்றம் எனக் கூறுவதை ஏற்க முடியாது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார். அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “கமல்ஹாசனுடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளைப் பற்றியும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் நாங்கள் விரிவாக ஆலோசித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்திக்கு நன்றி

ராகுலின் இந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கமல்ஹாசன், “எனக்கு சந்திக்க நேரம் ஒதுக்கி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்ட ராகுல் காந்திக்கு நன்றி. இருவருக்கும் இடையேயான கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்று குறிப்பிட்டுள் ளார்.

கடந்த மே 23-ம் தேதி கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி பெங்களூருவில் பதவியேற்றார். அந்த விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன், ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து 2-வது முறையாக ராகுல் காந்தி - கமல்ஹாசன் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பார் எனப் பேசப்படும் நிலையில், காங்கிரஸ் தலைவரை கமல் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x