தீ விபத்தில் காயமடைந்த குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு

தீ விபத்தில் காயமடைந்த குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு
Updated on
1 min read

காரைக்குடி: குன்றக்குடியில் சண்முகநாத பெருமான் கோயில் யானை தங்கியிருந்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த யானை உயிரிழந்தது.

காரைக்குடி அருகே குன்றக்குடியில் உள்ள சண்முகநாதப் பெருமான் கோயிலுக்கு கடந்த 1971-ம் ஆண்டு பக்தர் ஒருவரால் யானை `சுப்புலட்சுமி' வழங்கப்பட்டது. இந்த யானை கோயில் அருகேயுள்ள தகரக் கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தது. வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அடியில் ஓலை வேயப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கூடாரத்தில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென ஓலையில் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் யானை `சுப்புலட்சுமி'க்கு காயம் ஏற்பட்டது.

வனத்துறை, கால்நடை பராமரிப்புத் துறையினர் கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. யானை உடலுக்கு பொன்னம்பல அடிகளார் மற்றும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோயில் யானை உயிரிழந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in