Published : 19 Jun 2018 04:58 PM
Last Updated : 19 Jun 2018 04:58 PM
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பாம்பின் விஷம் பட்டதில் 5-ம் வகுப்பு மாணவிகள் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சியில் உள்ள குப்பத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) 5-ம் வகுப்புமாணவ மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்தனர். அப்போது, மரத்தில் இருந்து திரவம் ஒன்று வடிந்து சில மாணவிகள் மீது விழுந்துள்ளது. அதன்பிறகு மரத்தில் மூன்று பாம்புகள் இருந்ததும் தெரியவந்தது.
இதையறிந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து மணிமேகலை, பாண்டிமீனா, மகேஸ்வரி, சிவஜோதி, கனிஸ்கா ஆகிய மாணவிகளுக்கு அரிப்பு, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாணவிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன், துணை ஆய்வாளர் வேலுசாமி உள்ளிட்டோர் மருத்துவனையில் மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT