Published : 03 Jun 2018 07:31 AM
Last Updated : 03 Jun 2018 07:31 AM

மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் தூத்துக்குடியில் ஆய்வு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பேரணியின்போது கலவரம் வெடித்தது. இதைக் கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.

இதுதொடர்பான ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்வதற்காக, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன், சத்தியபிரியா, பாலகிருஷ்ண பிரபு மற்றும் மாநில மனித உரிமை ஆணைய உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழு நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தது.

இந்த குழுவினர், கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீ வைத்து எரிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கூடம் மற்றும் ஸ்டெர் லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு, இறந்தவர்களின் வீடுகள், திரேஸ்புரம் பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடமும் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், நேற்று மாலை அவர்கள் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

இதனிடையே, தேசிய மனித உரிமை ஆணையத்தினர் நேற்று மாலை தூத்துக்குடி வந்தனர். இவர்கள் இன்று தங்கள் விசாரணையை தொடங்குகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x