இஸ்லாமிய பெண் குறித்து சர்ச்சை கருத்து: விருதுநகர் பாஜக நிர்வாகி கைது

இஸ்லாமிய பெண் குறித்து சர்ச்சை கருத்து: விருதுநகர் பாஜக நிர்வாகி கைது
Updated on
1 min read

விருதுநகர்: இஸ்லாமிய பெண் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதாகக் கூறி விருதுநகரில் பாஜக கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் இன்று கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (52). பாஜகவில் விருதுநகர் மாவட்ட பார்வையாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர், நீலகிரி மாவட்டத்தில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த யாஷிகா என்ற பெண் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, வெற்றிவேல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தக் கருத்து தவறான செய்தி என்றும், தவறான செய்தி பரப்புவோர் மீது நீலகிரி மாவட்ட போலீஸார் மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட காவல் துறை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இது தொர்பாக, நீலகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அருப்புக்கோட்டையில் தனது வீட்டிலிருந்த பாஜக கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேலை நீலகிரி மாவட்ட போலீஸார் இன்று கைது செய்தனர். இச்சம்பவம் விருதுநகர் மாவட்ட பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in