Published : 16 Jun 2018 08:26 AM
Last Updated : 16 Jun 2018 08:26 AM

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் திட்டம்

நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல் வர் கே.பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். அப்போது பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மத்தி யில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், மத்திய திட்டக் கமிஷன் மாற்றப்பட்டு, அதற்கு பதில் ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இந்த அமைப்பில், மாநில முதல்வர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப் பின் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து மாநிலத்துக் கான நிதிகள் விடுவிக்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (17-ம் தேதி) நடக்கிறது. ‘வளர்ந்த இந்தியா 2022’ என்ற கருத்தை மையப்படுத்தி நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் பங்கேற்பதற்காக முதல் வர் கே.பழனிசாமி, இன்று மாலை 6.20 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். டெல்லியில் அவரை தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் அதிமுக எம்பிக்கள் வரவேற்கின்றனர்.

நாளை காலை நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடி யை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பிரதமரை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், அணைகள் பாதுகாப்புச் சட்டம், மாநில அரசுக்கு வரவேண்டிய நிலுவை தொகைகள் குறித்தும் மனு அளிப்பார் என்றும் டெல்லி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை இரவே முதல் வர் சென்னை திரும்புகிறார் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தேதி மாற்றம்

முன்னதாக, இக்கூட்டம் இன்று (16-ம் தேதி) நடப்பதாக இருந்தது. ஆனால், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ரம்ஜான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தாக தெரிகிறது.

இதையடுத்து, சனிக்கிழமை நடக்கவிருந்த நிதி ஆயோக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x