“என் நிலத்தை அபகரிக்க முயற்சி” - காலில் தீக்காயங்களுடன் மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்த மூதாட்டி

மூதாட்டி
மூதாட்டி
Updated on
1 min read

மதுரை: மதுரை அருகே தன்னுடைய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் தன்னை தீயிட்டு கொளுத்தியதாக தீக்காயங்களுடன் வந்து, போலீஸாருக்கு எதிராக ஆட்சியரிடம் புகார் அளித்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கச்சகட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையம்மாள் (70). இவரது கணவர் பழனியப்பன் உயிரிழந்த நிலையில் தனியாக வசிக்கிறார். இந்நிலையில், பிச்சையம்மாள் இன்று காலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது அவரது கால்களில் தீக்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இது பற்றி அறிந்ததும் அங்கு பாதுகாப்புப் பணியில் தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதா பூபாலன், மூதாட்டியை அழைத்துச்சென்று அவருக்கு டீ வாங்கிக் கொடுத்து புகார் குறித்து கேட்டறிந்து அவரை ஆசுவாசப்படுத்தினார்.

அதன் பிறகு ஆட்சியரிடம் மூதாட்டி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: ‘எனது வீட்டின் அருகிலுள்ள நபர்கள் எனக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கவும், பணம் மற்றும் நகையை பறிக்கவும் திட்டமிடுகின்றனர். இதற்காக எனது வீட்டை அடித்து நொறுக்கி உடலில் மண்ணைண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்தனர். பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினேன்.

இது தொடர்பாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என்னை கொல்ல முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in