விநாயகர் சதுர்த்தி | பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி தரக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

இடம்: திண்டுக்கல் | படம்: நா.தங்கரத்தினம்
இடம்: திண்டுக்கல் | படம்: நா.தங்கரத்தினம்
Updated on
1 min read

சென்னை: விநாயகர் சதுர்த்திக்காக பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், எளிதில் மக்கும் தன்மையுள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை கிராமத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக இன்று (செப்.2) விசாரணை வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் யு. உதயக்குமார் ஆஜராகி, “மூன்று அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரியதால் அங்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

மனுதாரர் வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரினால் அனுமதி வழங்கப்படும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளதால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும்” என்றார்.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, “பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க போலீஸார் அனுமதிக்கக்கூடாது. எளிதில் மக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மேலும், மனுதாரர் வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in