ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: போக்குவரத்து துறை செயலருக்கு தொழிற்சங்கம் புதிய கோரிக்கை

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: போக்குவரத்து துறை செயலருக்கு தொழிற்சங்கம் புதிய கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் பேரவை, சங்கங்கள் ஆகியவற்றின் தன்மைக்கேற்ப பிரதிநிதித்துவம் மற்றும் பேச்சுவார்த்தையில் கருத்துகளை தெரிவிக்கும் வாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும்.

அடுத்த பேச்சுவார்த்தையில் 8 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்படும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, 2003-ம் ஆண்டு ஏப்.1-ம்தேதிக்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம், ஓய்வுபெறும் நாளில் பலன்கள் வழங்குதல், ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் உள்ள பலன்களை வழங்குதல், ஓய்வூதியர்களுக்கான மருத்துவகாப்பீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும்.

இதர பிரச்சினைகளை அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் இறுதிப்படுத்தலாம். மேலும், கூட்டமைப்பின் சார்பாக 31கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து கோரிக்கைகளையும் விவாதித்து ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in