Published : 21 Jun 2018 08:43 AM
Last Updated : 21 Jun 2018 08:43 AM

லாரிகள் வேலைநிறுத்தம் வலுக்கிறது; பால், தண்ணீர் சப்ளை பாதிக்கும் அபாயம்: பல கோடி மதிப்பு சரக்குகள் தேக்கம்

லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்ததால், நாடுமுழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18-ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் நாடுமுழுவதும் நேற்று 3-வது நாளாக பல்வேறு இடங்களில் லாரிகள் நிறுத்தப்பட்டன. லைநிறுத்தப் போராட்டம் வலுத்துள்ள நிலையில், பால் மற்றும் தண்ணீர் லாரிகளின் உரிமையாளர்களும் இதில் கலந்துகொள்ள திட்டமிட்டிருப்பதால், அவற்றின் சப்ளையில் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் உள்ள 81 லட்சம் சரக்கு லாரிகளில் 40 சதவீதம் ஓடவில்லை. குறிப்பாக, சென்னைக்கு தினமும் வந்து செல்லும் சரக்கு லாரிகளில் 50 சதவீதம் ஓடவில்லை. தமிழகத்தில் சுமார் 3 லட்சம் லாரிகள் ஓடவில்லை. மத்திய அரசு இன்று (21-ம் தேதி) எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

இது தொடர்பாக தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் சொரூபன் கூறும்போது, ‘‘லாரிகள் மூலம் தினமும் கொண்டு வரவேண்டிய காய்கறிகளை சிறிய வாகனங்கள் மூலம் கொண்டு வருகிறோம். இதனால், வழக்கமாக வரவேண்டிய அளவுக்கு கொண்டுவர முடியவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரவேண்டிய நாசிக் வெங்காயம், உருளைக்கிழக்கு உள்ளிட்ட காய்கறிகள் வருவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x