‘சூறைக்காற்று வீசக்கூடும்’ - குமரி மீனவர்கள் 3 நாள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

நாகர்கோவில்: சூறைக்காற்று வீசலாம் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வியாழக்கிழமை (ஆக.29) முதல் சனிக்கிழமை (ஆக.31) வரை 3 நாள்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, வடகிழக்கு மற்றும் அதைஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலுக்கும், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளுக்கும் நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என தேசிய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த கடற்பகுதிகளில் இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

அத்துடன் கேரளா - கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே வரும் சனிக்கிழமை வரை கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இப்பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in