வலுபெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு

வலுபெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் பரவலாக மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இன்று (ஆக.29) காலை மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (ஆக.30) மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். மேலும் அதற்கடுத்த இரண்டு தினங்களில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்றும் நாளையும் (ஆக.30), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆக.31 முதல் செப்.4-ம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-லிருந்து 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29லிருந்து 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க்ககூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (ஆக.29 ) முதல் செப்.2ம் தேதி வரையில் தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்றும் வீசக்கூடும் என்பதால், மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in