மணல் கடத்தல் வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம்? - நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மணல் கடத்தல் வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம்? - நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

ரேஷன் கடையில் விற்கப்பட்ட 7 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்திச்சென்று கள்ளச்சந்தையில் விற்கமுயன்றதாக கடந்தாண்டு ஏப்ரல்மாதம் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தசத்தியமூர்த்தி என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில்சிறையில் அடைக்க சேலம் மாவட்டஆட்சியர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனது கணவர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி சத்தியமூர்த்தியின் மனைவி பூஞ்சோலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கணவர் அரசு குடோனில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தியிருந்தால் அவர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும், அவருக்கு இந்த அரிசியைவிற்றவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள்கேள்வி எழுப்பினர்.

மேலும், தேவைப்படாத நபர்களுக்கு ரேஷன் அரிசியை விநியோகிக்கக்கூடாது என்றும், இதுபோன்றசெயல்களுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது என்றும் கருத்து தெரிவித்து, சத்தியமூர்த்தி மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்தனர்.

அத்துடன் மணல் கடத்தல் வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in