Published : 11 Jun 2018 09:42 AM
Last Updated : 11 Jun 2018 09:42 AM

ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனையை ரூ.200 கோடி மதிப்பீட்டில் 1,200 படுக்கைகளுடன் விரிவுபடுத்த திட்டம்

காஞ்சிபுரத்தில் தற்போது 292 படுக்கைகள் மட்டுமே கொண்ட புற்றுநோய் மருத்துவமனையை நவீன வசதிகளுடன் 1,200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.200 கோடி மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை இறந்த பின்னர் அவரது நினைவாக இந்த மருத்துவமனையை தமிழக அரசு தொடங்கியது. தற்போது இம் மருத்துவமனையில் 25 மருத்துவர்கள், 38 செவிலியர்கள் உட்பட 103 பேர் பணிபுரிகின்றனர். மொத்தம் 292 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆண்டுக்கு 30,000 பேர் வரை இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் சுமார் 5,000 பேர் வரை உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

குறிப்பாக, இந்தப் புற்று நோய் மருத்துவமனைக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சிகிச்சைக்காக பொதுமக்கள் வருகின்றனர்.

இலவச சிகிச்சை

தமிழ்நாட்டில் புற்றுநோய்க்கு என்று தனியாக செயல்படும் ஒரே அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனைதான். இங்கு புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிதீவிர புற்று நோய்களுக்கும் தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் தி்ட்டத்தில் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன் படுத்தும் இந்த மருத்துவமனையை விரிவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த மருத்துவமனையை மத்திய அரசின் கிராம சுகாதார இயக்கத்தின் நிதியில் இருந்து ரூ.200 கோடி பெற்று விரிவாக்கம் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 1,200 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைக் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்தப் பணிக்காக மண் பரிசோதனைகள் உள்ளிட்டவை நடைபெற்று முடிந்துவிட்டன. இதனை இந்த மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் உறுதிப் படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து இந்த புற்றுநோய் மருத்துவமனையின் முக்கிய அலுவலர் ஒருவர் கூறும்போது, “மத்திய அரசின் கிராம சுகாதார இயக்கத்தின்கீழ் ரூ.200 கோடி யில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த மருத்துவமனை யில் மருத்துவர்கள், செவிலியர்கள் தவிர தொழில்நுட்ப உதவியாளர்கள் உட்பட இதர பணியிடங்கள் 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை தமிழக அரசு பூர்த்தி செய்தால்தான் விரிவாக்கத்தின் முழு பலன் மக்களுக்கு கிடைக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x