விருதுநகர் பள்ளிகளுக்கு எடை குறைவான முட்டை விநியோகம் - ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிந்துரை 

பிரதிநிதித்துவப்படம்.
பிரதிநிதித்துவப்படம்.
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு எடை குறைவான மூட்டைகளை விநியோகம் செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 1.20 லட்சம் மாணவ - மாணவியருக்கு திங்கள் முதல் வெள்ளி வரை சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுடன் வழங்கப்படும் முட்டைகள் குறைந்தபட்சம் 45 கிராம் எடை இருக்க வேண்டும் என்பது அரசு நிர்ணயம் செய்த விதிமுறை. ஆனால், சில பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவாகவும் சிறியதாகவும் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல அலுவலர்கள் ஆய்வின் போது சில பள்ளிகளில் மாணவர்களுக்கு எடை குறைவான முட்டை சத்துணவில் வழங்கப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக, விருதுநகர் மாவட்ட முட்டை விநியோக ஒப்பந்ததாரரான நாமக்கலைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் முட்டை விநியோகத்தை 3 மாதங்கள் நிறுத்தி வைத்து மாற்று நிறுவனத்தின் மூலம் முட்டை விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், இன்று சாத்தூர் ஊராட்சி ஒன்றித்திற்கு உட்பட்ட சின்னகொல்லப்பட்டி ஊராட்சி தெக்கூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு விநியோகம் செய்யப்படும் முட்டையின் எடையும் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு வந்த முட்டைகளை திருப்பி அனுப்பிவைக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முட்டைகள் விநியோகம் செய்துவரும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் கருத்துரு அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in