Published : 17 Jun 2018 12:05 PM
Last Updated : 17 Jun 2018 12:05 PM
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இருந்து வாபஸ் பெற்று தேர்தலை சந்திக்கப் போவதாக எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் அறிவித்தார். இதுகுறித்து தினகரன் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
18 பேர் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வந்ததும் நாங்கள் அனைவரும் ஆலோசனை நடத்தினோம். அப்போது இவ்வழக்கில் இருந்து வாபஸ் பெற்று தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கருத்தை தங்க தமிழ்செல்வன் முன்வைத்தார். ஆனால், மற்ற எம்எல்ஏக்கள் இவ்வழக்கை சட்டரீதியாக கடைசிவரை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதன்பிறகும் தங்க தமிழ்செல்வன் தனது கோரிக்கை பற்றி என்னிடம் பேசினார்.
குக்கர் சின்னத்தில் போட்டி
அதுகுறித்து வழக்கறிஞரிடமும் ஆலோசனை நடத்தினோம். அவர் முடிவில் தவறில்லை. அரசியல் ரீதியாக சரியாகத்தான் இருக்கிறது. வழக்கில் இருந்து வாபஸ் பெற்று, எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிபட்டி தொகுதியில் குக்கர் சின்னத்திலே போட்டியிடப் போவதாகக் கூறினார். அவரது முடிவில் எந்த உள்நோக்கமும் இல்லை.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
தங்க தமிழ்செல்வன் விளக்கம்
இதுதொடர்பாக தங்க தமிழ்செல்வன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
எவ்வளவு காலம்தான் எம்எல்ஏ இல்லாத தொகுதியாக இருப்பது என எனது தொகுதி மக்கள் கேட்கின்றனர். மீண்டும் தேர்தல் நடத்தி தொகுதிக்கு ஒரு எம்எல்ஏவை கொண்டு வருவோம் என அவர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, தொகுதி மக்கள் விருப்பப்படி வழக்கை வாபஸ் பெறுவது என முடிவு செய்துள்ளேன். இது எங்கள் அணியின் முடிவல்ல. எனது தனிப்பட்ட முடிவு. எங்கள் அணியில் உள்ள மற்றவர்கள் நிலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.
மனு நாளை வாபஸ்?
வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவர் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்க தமிழ்ச்செல்வனின் இந்த முடிவால் தினகரன் அணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT