கடலூர் | அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு - 500 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்

கடலூர் | அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு - 500 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்
Updated on
1 min read

கடலூர்: கடலூர் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு 500 கிலோ வெடி மருந்துகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட உரிமையாளர்கள் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடலூர் அருகே உள்ள நொச்சிக்காடு பகுதியில் ராஜேஷ் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் ஆகிய இருவரும் பட்டாசு தயாரித்து விற்பனை செய்ய உரிமம் பெற்று விற்பனை செய்து வந்தனர். இந்தாண்டு இதுவரையில் உரிமத்தை புதுப்பிக்கவில்லை. இந்த நிலையில் அந்தப் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் பணியில் நடைபெறுவதாக கடலூர் முதுநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையொடுத்து கடலூர் முதுநகர் போலீஸார் இன்று(ஆக.25) நொச்சிக்காடு பகுதிக்குச் சென்று ராஜேஷ் பட்டாசு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்தபோது. அங்கு பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பேன்சி வகை பட்டாசுகள் தயாரிப்பதற்கான பணியில் அங்கு ஊழியர்கள் ஈடுபட்டதுடன், அதற்காக 500 கிலோ வெடி மருந்துகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. போலீஸாரை பார்த்ததும் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தப்பி சென்று விட்டனர். போலீஸார் இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் வட்டாட்சியர் பலராமன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வெடிமருந்துகளை பறிமுதல் செய்ய உத்தவிட்டார்.

இதனை தொடர்ந்து 500 கிலோ வெடிமருந்து பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த வெடிமருந்து பொருள்கள் எங்கிருந்து இங்கு கொண்டுவரப்பட்டன, கொண்டு வந்தது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உரிமையாளர்களையும் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in