Published : 31 May 2018 08:11 AM
Last Updated : 31 May 2018 08:11 AM

தஞ்சை பெரிய கோயிலில் இருந்து 50 ஆண்டுக்கு முன்பு மாயமானராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் மீட்பு: குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து இன்று தமிழகம் வந்தடையும் என போலீஸார் தகவல்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் மாயமான, சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் தீவிர முயற்சியால், குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு, தமிழகம் கொண்டு வரப்படுகின்றன.

தஞ்சைப் பெரிய கோயிலை கட்டிய முதலாம் ராஜராஜ சோழன், அவரது பட்டத்தரசி உலகமாதேவி ஆகியோருக்கு, அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே பெரிய கோயிலுக்கு கொடையாக அளிக்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளும், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாயின.

இவ்விரு சிலைகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் பவுன்டேசன் காலிகோ அருங்காட்சியகத்தில் இருப்பதாக தெரியவந்தது.

பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது விழாவை முன்னிட்டு, இந்த சிலைகளை மீட்க, அன்றைய திமுக ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அன்றைய கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, தொல்லியல் அறிஞர் நாகசாமி, சோழர் வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன், ஐஏஎஸ் அலுவலர் இறையன்பு ஆகியோரைக் கொண்ட குழு குஜராத் சென்று, அந்த சிலைகள் பெரிய கோயிலை சார்ந்தவை என்பதை உறுதி செய்தது. எனினும், அருங்காட்சியக உரிமையாளர்கள் அதனை ஏற்க மறுத்ததால், மீட்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கோயிலில் இருந்து ராஜராஜன், உலகமாதேவி சிலைகள் உள்ளிட்ட மேலும் பல அரிய சிலைகள் மாயமானதும், இதுகுறித்து கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறையும், காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் மவுனமாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணை அதிகாரி டிஎஸ்பி ராஜாராம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் முறையாக புகார் பதிவு செய்தார்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறியது: இந்த சிலைகள், 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கோயிலின் உயர் நிலை நிர்வாகிகள் சிலரால் திருடப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்துக்கு அருகில் உள்ள சறுக்கை கிராமத்தை சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலச்சாரி என்பவர் மூலம், சென்னையில் கவுதம் சாராபாய்க்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு (இன்றைய மதிப்பில்) விற்றது தெரியவந்தது.

இந்த 2 சிலைகளையும் மீட்க, ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், குஜராத் அருங்காட்சியகத்துக்கு சென்று கடந்த 28-ம் தேதி சிலைகளை மீட்டு, இன்று (மே 31) சென்னை வருகின்றனர் என்றனர்.

தஞ்சைப் பெரிய கோயிலை கட்டி குடமுழுக்கு நடத்தியபோது, ராஜராஜனின் தளபதியான சேனாதிபதி மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால், இந்த சிலைகள் உருவாக்கப்பட்டு, இருவரும், கோயில் மூலவரான பெருவுடையாரை நோக்கி கும்பிடுவதுபோல வைக்கப்பட்டதாக தெரிகிறது. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.150 கோடி ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x