கோப்புப் படம்
கோப்புப் படம்

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்து இயக்குநர் தகவல்

Published on

கும்பகோணம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஆக.24) அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவையொட்டி வரும் 28-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஓரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் காரைக்கால் உள்ளிட்ட முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கும், அதேபோல் வேளாங்கண்ணியிலிருந்து மேற்கண்ட ஊர்களுக்கும் இரவு - பகல் எந்த நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளன.

மேலும், மேற்படி அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காகச் சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் இருப்பர். எனவே, இச்சிறப்பு பேருந்து சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in