Published : 08 May 2018 10:34 AM
Last Updated : 08 May 2018 10:34 AM

போராட்டத்தை ஒடுக்காமல் சுமூகத் தீர்வு: கே.பாலகிருஷ்ணன், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டத்தை ஒடுக்காமல் அவர்களுடன் பேச்சு நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கே.பாலகிருஷ்ணன்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்பட வேண்டும், சத்துணவு - அங்கன்வாடி - வருவாய் கிராம உதவியாளர்கள், கணினி ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் தமிழகத்தில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

மீண்டும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் மே 8-ம் தேதி முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கத் தலைவர்களை இரவோடு, இரவாக கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

கைக்குழந்தைகளுடன் பெண்களும் அடைக்கப்பட்டுள்ளனர். அரசின் இந்த மோசமான நடவடிக்கைகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கவே செய்யும். எனவே கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளோடு பேச்சு நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்.

ஜி.கே.வாசன்: ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினரோடு தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x