Published : 10 May 2018 07:07 AM
Last Updated : 10 May 2018 07:07 AM

மதுரையில் இளைஞர் கொன்று புதைப்பு: தந்தையிடம் போலீஸார் விசாரணை

மதுரையைச் சேர்ந்த இளைஞர் கொன்று புதைக்கப்பட்டது தொடர்பாக, அவரது தந்தையிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியிலுள்ள டோக் நகர் 5-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் செளபா என்கிற சவுந்திரபாண்டியன் (55). பிரபல எழுத்தாளர். இவரது மனைவி லதா பூரணம். இவர் கோவில்பட்டி அரசு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார். இவர்களது மகன் விபின் (27). இவர் தனது தந்தையுடன் டோக் நகரில் வசித்து வந்தார். விபினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடும்ப பிரச்சினையால் கணவன், மனைவி பிரிந்து வசிக்கின்றனர். விபின் இருவரிடமும் அவ்வப்போது தங்கி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக தந்தையுடன் மதுரையில் தங்கி இருந்தார்.

காணவில்லை என தாய் புகார்

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி முதல் தனது மகனின் செல்போனில் பேச லதா பூரணம் முயன்றுள்ளார். அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் சந்தேகப்பட்டு தனது மகனை மே 5-ம் தேதி முதல் காணவில்லை என எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் விபின் மாயமானதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். சந்தேகத்தின்பேரில் அவரது தந்தை சவுந்திரபாண்டியனை பிடித்து 3 நாட்களாக விசாரித்தனர். இதில் மகன் விபினை சவுந்திரபாண்டியன் கொலை செய்தது தெரியவந்தது.

முரண்பட்ட தகவல்கள்

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சவுந்திரபாண்டியனிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது மகன் எங்கிருக்கிறார் என தெரியாது என்றும், எங்காவது காப்பகத்தில் சேர்ந்திருக்கலாம் எனவும் முரண்பட்ட தகவல்களை தொடர்ந்து கூறி வந்தார். இதற்கிடையில் விபின் இறந்து விட்டதாக நேற்று மாலை தகவல் கிடைத்தது.

தோட்ட தொழிலாளர்கள் தகவல்

இதை உறுதி செய்ய சவுந்திரபாண்டியனுக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகில் உள்ள அவரது தோட்டத்துக்குச் சென்றோம். அங்கு பணிபுரியும் பள்ளப்பட்டியைச் சேர்ந்த பூமி(40), நிலக்கோட்டையைச் சேர்ந்த கனிக்குமார்(42) ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். இதில் விபின் இறந்த நிலையில், அவரது தந்தை சவுந்திரபாண்டியன் தனது காரில் கொண்டு வந்ததாகவும், மகனின் உடலை எரித்து, 6 அடி குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மதுபோதையில் மகன் தகராறு

இதன் அடிப்படையில் மீண்டும் சவுந்திரபாண்டியனிடம் விசாரித்தோம். மதுபோதையில் இருந்த விபின் வீட்டில் தன்னுடன் தகராறில் ஈடுபட்டபோது, ஆத்திரத்தில் சுத்தியலால் தாக்கியதில் மகன் இறந்துவிட்டதாக சவுந்திரபாண்டியன் ஒப்புக் கொண்டுள்ளார். அவரது உடலை தோட்டத்துக்குக் கொண்டு சென்று எரித்து புதைத்ததாக தெரிவித்தார். 3 நாட்களாக தொடர்ந்து மாறி, மாறி முரண்பட்ட தகவல்களை தெரிவித்த அவர், தற்போது மகனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

கொலை வழக்காக மாற்றம்

எனிலும் விபினின் உடலை இன்று (மே 10) வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும். தற்போது கிடைத்த ஆதாரம், தோட்ட தொழிலாளர்கள் அளித்த தகவலின்பேரில் விபின் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளோம். அவரது தந்தை சவுந்திரபாண்டியன் உட்பட 3 பேரும் எங்களது விசாரணை வளையத்தில் உள்ளனர் என்றனர்.

இவ்வழக்கின் விசாரணை அலுவலராக எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் செயல்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x