Published : 07 May 2018 11:46 AM
Last Updated : 07 May 2018 11:46 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆற்றுப்பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த காவலர், பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதி தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ் துரை (33). நம்பியாற்று பகுதியில் மணல் கொள்ளை நடைபெறுவதும், அவ்வாறு மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை போலீஸார் பிடிப்பதும் வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில், தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு நம்பியாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலையில் வெகுநேரமாகியும் ஜெகதீஷ் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, சக காவலர்கள் அவரை தேடியபோது பரப்பாடி பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். நம்பியாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் இரும்புக் கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் காவலர் ஜெகதீஷை தாக்கிக் கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் அப்பகுதியில் விசாரணை நடத்தினார். காவலர் ஜெகதீசன் கொலை தொடர்வாக இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT