Published : 20 May 2018 08:43 AM
Last Updated : 20 May 2018 08:43 AM

உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையால் கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது; அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து

உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையால் கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையால் கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. குமாரசாமி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். எதிர்வரும் தேர்தல்களில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இதன்மூலம் பறைசாற்றப்பட் டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:

உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டாலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடவடிக்கையாலும் கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது.

பணத்துக்கும் பதவிக்கும் பலியாகாமல் ஒற்றுமையாக இருந்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர்களுக்கு இது சரியான பாடம்.

விசிக தலைவர் திருமாவளவன்:

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்கு போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத நிலையில் ஆளுநரின் துணையோடு சட்டவிரோத முறையில் ஆட்சிக்கு வரும் பாஜகவின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கு கோராமலேயே எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம், கர்நாடகத்தில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது.

மநீம தலைவர் கமல்ஹாசன்:

கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு.

மமக தலைவர் ஜவாஹிருல்லா:

பாஜக மூட்டிய குதிரை பேரம் என்னும் நெருப்பாற்றைக் கடந்து மதச்சார்பின்மையை நிலைநாட்டிய கர்நாடக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துகள்.

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி இனி வரும் தேர்தல்களிலும் தொடர அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒற்றுமையுடன் ஓர் அணியில் செயல்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x