Published : 16 May 2018 07:55 AM
Last Updated : 16 May 2018 07:55 AM
பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 21-ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாகவும், அதேபோல், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் மே 21 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், அன்றைய தினம் பிற்பகல் முதல் பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) தங்கள் பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ள லாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மே 17 முதல் 19 வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே பின்னர், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் ஜூன் இறுதியில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்கும் தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT