Published : 07 May 2018 06:14 PM
Last Updated : 07 May 2018 06:14 PM

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலைதான் செய்துகொண்டார்; வழக்கை கைவிட்டது சிபிஐ: தந்தைக்கு சம்மன்

 டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கில் அவர் தற்கொலை செய்துகொண்டாதாக விசாரணையில் தெரிய வந்ததால் வழக்கைக் கைவிடுவதாக, சிபிஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியின் பதில் கோரப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு கோகுல்ராஜ் என்ற மாணவர் கொலை செய்யப்பட்டார், இந்த வழக்கை விசாரித்து வந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கு விசாரணையில் மேலதிகாரியின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. காவலர்களுக்கான குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் விஷ்ணுபிரியாவின் உடல் மீட்கப்பட்டது. அவர் எழுதிய கடிதமும் மீட்கப்பட்டது.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார் என்று உறுதியானது. ஆனால், விஷ்ணுபிரியா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த சிபிஐ, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான் என்றும் இதில் யாருக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்திருந்தது, இதனால் வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

விஷ்ணுபிரியா மர்ம மரண வழக்கை கைவிடுவதாக, சிபிஐ தெரிவித்துள்ளதால், இதை ஏற்றுக்கொண்டு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என அவரது தந்தை ரவிக்கு கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x